இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐஓபி) தலைமை அலுவலகத்தில் சுதந்திர தினம் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கண்கவர் அணிவகுப்புடன், காலை 08:00 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட, மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி பங்கேற்பாளர்கள் அனைவராலும் ஏற்கப்பட்டது. இக்கொண்டாட்டத்தில், நிர்வாக இயக்குநர்கள் திரு. ஜாய்தீப் தத்தா ராய் மற்றும் திரு. தனராஜ் டி, முதன்மை கண்காணிப்பு அதிகாரி திரு. பி. கிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். வங்கியின் பணியாளர்கள் அனைவரும் இந்நாட்டின் முதன்மையான தேசிய விழாவான சுதந்திர தின கொண்டாட்டத்தில் மிகுந்த ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்காக பள்ளிப் பேருந்து வாங்குவதற்கு 'தேசிய மதிப்பு கல்வி அறக்கட்டளைக்கு' (NIVE டிரஸ்ட்) நிதி உதவி வழங்கியுள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) சேவைகளை மேம்படுத்தவும் நெறிப்படுத்தவும் இலக்கு கொண்ட பிரத்யேக முயற்சியான, 'மையப்படுத்தப்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பின்புல அலுவலகத்தையும்' (Centralized NRI Back Office) இவ்வங்கி இன்று தொடங்கியது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான மையப்படுத்தப்பட்ட பின்புல அலுவலகத்தை வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் முறைப்படித் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய திரு. அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா அவர்கள், கல்வி, சம வாய்ப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை ஆதரிப்பதில் வங்கி தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். NIVE அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆதரவானது, மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் கற்றல் சூழலை உருவாக்கவும் வழிவகுக்கும் என்றார். மேலும், இந்த மையப்படுத்தப்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பின்புல அலுவலகமானது, வங்கியின் வெளிநாடுவாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு விரைவான, தடையற்ற மற்றும் வாடிக்கையாளர் மைய சேவைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்டார். இந்த முயற்சியின் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தொடர்பான முக்கியச் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு ஒற்றைக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, சேவைகள் விரைவாக கிடைப்பதை ஏதுவாக்கும்; இதன் மூலம் வாடிக்கையாளரின் திருப்தி மேலும் மேம்படுத்தப்படும்.
Comments
Post a Comment